search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியர் சுட்டுக்கொலை"

    • போலீசாரை பார்த்ததும் சச்சின் தனது காரில் ஏறி தப்ப முயன்றார்.
    • சச்சின் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவருடைய முன்னாள் மனைவி லியா கோல்ட்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் அன்டோனியோ நகரில் வசித்து வந்த இந்தியர் சச்சின் குமார் சாஹூ (வயது 42). சம்பவத்தன்று சச்சின் தன்னுடன் அறையில் தங்கியிருந்த தோழியை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், 2 போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்தனர்.

    அப்போது சச்சின் ஒரு பெண் மீது வேண்டுமென்றே காரை மோதுவதை போலீஸ் அதிகாரிகள் பார்த்தனர். இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் சச்சினை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல் சச்சின் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    அதனை தொடர்ந்து சச்சின் காரை மோதியதில் படுகாயம் அடைந்த 51 வயது பெண்ணை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சச்சினுக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பித்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் சச்சின் மீண்டும் தனது அறைக்கு வந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் 2 போலீஸ் அதிகாரிகள் சச்சின் இருக்கும் இடத்துக்கு விரைந்தனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் சச்சின் தனது காரில் ஏறி தப்ப முயன்றார். ஆனால் போலீஸ் அதிகாரிகள் இருவரும் துப்பாக்கி முனையில் அவரது காரை வழிமறித்தனர்.

    தங்களிடம் சரணடைந்துவிடும்படி சச்சினை போலீசார் எச்சரித்தனர். ஆனால் அதற்கு செவிசாய்க்க மறுத்த அவர் போலீஸ் அதிகாரிகள் மீது காரை ஏற்றினார். அதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் சச்சினை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அவர் காருக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார்.

    காயம் அடைந்த 2 போலீஸ் அதிகாரிகளையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதனிடையே சச்சின் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவருடைய முன்னாள் மனைவி லியா கோல்ட்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

    ×